Published : 19 Apr 2022 06:02 AM
Last Updated : 19 Apr 2022 06:02 AM

அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது: எடப்பாடி பழனிசாமி கருத்து

குளித்தலை அருகே வளையப்பட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி.

கரூர்: அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்றும், உழைக்கின்ற அனைவருக்கும் உயர் பதவி கிடைக்கும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாப்பசுந்தரத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் உருவச் சிலை திறப்பு விழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வளையப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், சிவபதி, ம.சின்னசாமி, முன்னாள் எம்.பி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி சிலையை திறந்து வைத்துப் பேசியது: அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. உழைக்கின்ற அனைவருக்கும் உயர் பதவி கிடைக்கும். அதிமுக ஆட்சியில்தான் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக அடிக்கல் நாட்டி, பெயர் சூட்டி வருகிறது.

அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் நிரம்பியதால் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக திகழ்ந்தது. காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது. அதிமுகவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மகளிருக்கு இரு சக்கர வாகனம் ஆகிய திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தியுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x