கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகள்: கடந்த நான்கு நாட்களில் 2 லட்சம் பேர் வருகை 

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகள்: கடந்த நான்கு நாட்களில் 2 லட்சம் பேர் வருகை 
Updated on
1 min read

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் விடுமுறையான கடந்த நான்கு நாட்களில் 2 லட்சம் சுற்றுலாபயணிகள் இயற்கை எழிலை ரசித்துள்ளனர். குறைந்த நாட்களில் சுற்றுலாபயணிகள் அதிகம் வந்துசென்றுள்ளனர். இது வழக்கத்தை விட அதிகம் என சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் கோடை சீசனின் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும். வழக்கமாக ஆண்டுதோறும் கோடை சீசனான மே மாதத்தில் மட்டும் ஏழு லட்சம் பேர் கொடைக்கானலின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க வந்து செல்வர். இந்த ஆண்டு பள்ளி தேர்வுகள் மே மாதம் துவங்குகிறது என்பதால் முன்னதாகவே கோடையை அனுபவிக்க குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை வாரவிடுமுறை தினங்களில் ஒவ்வொரு வாரமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்த வாரம் வியாழக்கிழமை சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டு, வெள்ளிக்கிழமை புனிதவெள்ளி, வழக்கமான சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் அரசுவிடுமுறையால் சுற்றுலாபயணிகள் வருகை மேலும் அதிகரித்து காணப்பட்டது. முதல் நாளே மலைச்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தான் கொடைக்கானலுக்குள்ளேயே நுழைய முடிந்தது.

கடந்த நான்கு நாட்களில் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் முழுமையாக நிரம்பியிருந்தது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் வலம் வந்தன. இதனால் சுற்றுலாத்தலங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

கடந்த நான்கு நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் சுமார் 2 லட்சம் பேர் வந்து சென்றிருப்பர் என சுற்றுலாத்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.

கோடை சீசனில் ஒரு மாதத்தில் சுமார் ஏழு லட்சம் சுற்றுலாபயணிகள் வந்து செல்வர். ஆனால் கடந்த நான்கு நாட்களிலேயே 2 லட்சம் சுற்றுலாபயணிகள் கொடைக்கானலுக்கு வந்து சென்றிருப்பது வழக்கத்தை விட அதிகம் என்கின்றனர்.

சுற்றுலாபயணிகளின் கூட்டத்தில் கொடைக்கானல் நகரம், சுற்றுலாத்தலங்கள் திணறின. இதமான தட்பவெப்பநிலை இயற்கை சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க தவறவில்லை. மேகக்கூட்டங்கள் இறங்கிவந்து சுற்றுலாபயணிகளை தழுவிச்செல்லும் காட்சிகள் பல இடங்களில் காணப்பட்டது. பலர் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.

மோயர்பாய்ண்ட், பிரையண்ட்பூங்கா, பைன்பாரஸ் பகுதிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சுற்றுலாபயணிகளை நம்பியுள்ள சிறுவியாபாரிகள் தங்கள் வியாபாரம் அதிகரித்ததால் மகிழ்ச்சியடைந்தனர். மே மாதம் கோடை சீசனில் சுற்றுலாபயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸாரும், சுற்றுலாபயணிகளுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகமும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்வது அவசியம். இதன்மூலம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாபயணிகள் முழுமையாக இயற்கை எழிலை கண்டுரசித்து சிரமமின்றி ஊர்திரும்ப ஏதுவாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in