Published : 06 Apr 2016 07:14 PM
Last Updated : 06 Apr 2016 07:14 PM

மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் என்னிடம் கேள்வி கேட்பதா?- கருணாநிதி கண்டனம்

மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் தமிழக அமைச்சர்கள் கேள்வி கேட்பதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2-ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்காதது ஏன்?’’ என கேள்வி எழுப்பியிருந்தேன். இதற்கு இரு அமைச்சர்களும் எந்த பதிலும் கூறவில்லை.

அதே அறிக்கையில், ‘‘மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழக மின்வாரியத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்துறை சீரமைப்புக்கான உதய் திட்டத்தில் இணையாததால் தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு குறைந்த விலையில் எல்.இ.டி. பல்புகளை தர தயாராக இருந்தும் அதிக விலைக்கு வெளிச்சந்தையில் பல்புகளை வாங்கியுள்ளது. மக்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை. மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு மட்டும் அறிக்கை அனுப்பவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதில் என்ன?’’ என கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதற்கெல்லாம் பதில் அளிக்காமல் என்னை கடுமையாக தாக்கி இரு அமைச்சர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாத அதிமுக அமைச்சர்கள், 2ஜி அலைக்கற்றை வழக்கு பற்றியும், ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கை துறை தெரிவித்திருப்பது பற்றியும் கருணாநிதியின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய தணிக்கை துறை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது சட்டத்துக்கு புறம்பானது என சில நாள்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைக்கூட தெரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுமாறு ஜெயலலிதாவிடம் கூற துணிவில்லாமல், அவரை திருப்திபடுத்துவதற்காக என்னிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதனைப் பார்க்கும்போது, ‘பாவம் அதிமுக அமைச்சர்கள்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x