Published : 06 Apr 2016 08:09 AM
Last Updated : 06 Apr 2016 08:09 AM
அதிமுக முதல் கட்டமாக கூட்டணி கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அதில் பிரதான கட்சியாக பங்கேற்றது பன்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி. ஆனால் நேற்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அவசர செயற்குழு கூட்டம் நேற்று போரூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது.
கூட்ட முடிவில் வேல்முருகன் கூறும்போது,‘‘ தொகுதிகள் தரவில்லை. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்றவில்லை. வட மாவட்டங்களில் எங்களுக்கு இருக்கும் ஓட்டு சதவீதத்தை அறிந்து கொண்டு தான் அவர் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்றுவதாக அறிவித்தால், வேறு கூட்டணிக்கு செல்வது தொடர்பாக முடிவெடுப்போம்’’ என்றார்.
வாழ்வுரிமை கட்சியைப் பொறுத்தவரை, அடுத்த சில நாட்கள் காத்திருந்து, அதிமுகவின் முடிவை இறுதியாக அறிந்து கொண்டு, திமுக அல்லது மக்கள் நல கூட்டணியில் சேர முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT