Published : 27 Mar 2022 06:14 PM
Last Updated : 27 Mar 2022 06:14 PM

ஓசூர் வனக்கோட்ட பறவைகள் கணக்கெடுப்பு: 200 வகையான பறவைகளை கண்டறிந்து பதிவு செய்த வனத்துறையினர்

ஓசூர் வனக்கோட்டத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணியின் போது கண்டறிந்து பதிவு செய்யப்பட்ட பறவைகள்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1,501ச.கி.மீ. ஆகும். இதில் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 504.33 ச.கி.மீ. ஆக உள்ளது. இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும் 172 வகையான வண்ணத்து பூச்சிகளும், காணப்படுகின்றன. குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத்திண்ணி, சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல்நிற அணில்கள், எகிப்திய கழுகு போன்ற வன உயிரினங்களும் ஓசூர் வனக்கோட்டத்தில் காணப்படுகின்றன.

நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் வனத்துறையின் மூலம் மூன்று கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக கழிமுக துவாரப் பகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப் பகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக காப்புக்காடுகளில் உள்ள ஈர நிலப்பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதியன்று ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப்பகுதிகளான ஓசூர் ராம்நாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி. அணை, கெலவரப்பள்ளி அணை, தளி ஏரி உள்ளிட்ட 25 நீர் நிலைகளில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் ஓசூர் வனக்கோட்டம் காவேரி வடக்கு வன உயிரின சரணாலய பகுதிகளிலும், காவேரி சின்னாறு நீர்பிடிப்பு பகுதிகள் உள்ள உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச்சரகங்களில் 16 பீட்களில் உள்ள காப்புகாடுகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஏசியன் பேரடைஸ், ஃப்லைகேட்சர், மயில்கள், புதர் காடைகள், கள்ளிப்புறா, வெண் கன்ன குக்குறுவான், நீலப்பைங்கிளி, கருந்தலை மாங்குயில், சின்னான், கருஞ்சிட்டு, ஊதா தேன்சிட்டு மற்றும் கழுகு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இப் பணியில் வனப்பணியாளர்கள், கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி மற்றும் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பு பணியின் போது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணக்கெடுப்பு குழுக்களுக்கும் முதலுதவி பெட்டிகள் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த கணக்கெடுப்பு பணிக்காக மாவட்ட வன அலுவலரும், வனஉயிரின காப்பாளருமான க.கார்த்திகேயனி தலைமையில் மார்ச் 25-ம் தேதியன்று முன் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி மற்றும் கணக்கெடுப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் ஓசூர் வனக்கோட்ட வனச்சரகர்கள், ஓசூர் வனக்கோட்ட வனகால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், மாவட்ட கவுரவ வனஉயிரின காப்பாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x