Published : 30 Apr 2016 01:07 PM
Last Updated : 30 Apr 2016 01:07 PM

மின்வெட்டே இல்லாத மாநிலமாக உருவாக்கியதை திசை திருப்ப முயற்சி: அமைச்சர் ஆர். விசுவநாதன் குற்றச்சாட்டு

மின்துறை அமைச்சரும் ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஆர். விசுவநாதன் திண்டுக்கல்லில் நேற்று மாலை கூறியதாவது:

கடந்தகால திமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சினை பிரதானமாக இருந்தது. தற்போது மின்வெட்டே இல்லாத தமிழகம் உருவாகி உள்ளது. இதை திசை திருப்பும் வகையில் திமுகவினரின் தூண்டுதலோடு சூரிய மின் ஒளி திட்டத்தில் முறைகேடு என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை.

ஏனென்றால், வாரம்தோறும் முதல்வர் தலைமையில் அனைத்து துறைகளையும் கொண்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. விடாமுயற்சி காரணமாக மின்வெட்டு தவிர்க்கப்பட்டது. சூரியஒளி மின்திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் குறித்து பலமுறை சட்டப்பேரவையில் விளக்கமும் அளித்துள்ளேன்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சூரிய மின்சக்தி கொள்முதல் விலை, ஆணை பிறப்பிக்கப்பட்டதில் இருந்து ஓராண்டு காலத்துக்கு மட்டுமே செல்லும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு அமைப்பாகும். இந்த ஆணையத்தின் செயல்பாடுகளில், தமிழ்நாடு அரசோ மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகமோ தலையிட முடியாது.

மற்ற மாநிலங்களான குஜராத்தில் ஒரு அலகுக்கு ரூ. 9.44, ராஜஸ்தானில் ரூ.7.50, மகாராஷ் ட்ராவில் ரூ. 7.95, உத்தரப்பிரதேசத்தில் ரூ. 7.06 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ரூ.7.01 தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடு என்பது ஒரு கற்பனை கட்டுக்கதை என்றார் விசுவநாதன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x