Published : 25 Mar 2022 06:50 PM
Last Updated : 25 Mar 2022 06:50 PM

தமிழகம் வந்த இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பிணை பெறப்பட்டு மண்டபம் முகாமில் தங்கவைப்பு

பிணை வழங்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள்

ராமேசுவரம்: தமிழகத்தில் தஞ்சம் புகும் இலங்கைத் தமிழர்களை எப்படி அணுகுவது என்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேவேளையில், சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட அகதிகளுக்கு ராமேசுவரம் நீதிமன்றத்தில்பிணை பெறப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியால் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை குழந்தைகளுடன் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 6 அகதிகளும், செவ்வாய்க்கிழமை இரவு 6 குழந்தைகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 அகதிகளும் 16 படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்தனர்.

இதில், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனுஷ்கோடி நான்காம் மீணல் தீடையில் வந்திறங்கிய 6 பேரும் மண்டபம் மெரைன் போலீசார் பாஸ்போர்ட் தடை சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 06.04.2022 தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மண்டபம் அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்ட அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ்

இந்நிலையில், வியாழக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இலங்கை தமிழர்கள் இன்றைக்கு பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக் கூடிய சூழ்நிலையில், பரிதவித்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த தமிழர்கள், அண்மையில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கக் கூடிய செய்திகளை எல்லாம் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பாக மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இதை எப்படிக் கையாள வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். எனவே அதற்கொரு விடிவுகாலத்தை இந்த தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இலங்கை தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மண்டபம் அகதிகள் முகாம்

அதன் அடிப்படையில் வியாழக்கிழமை மாலை அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மண்டபம் முகாம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களைச் சந்தித்து அவர்களது நலன் குறித்து விசாரித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் ஜெசிந்தா லாசரஸ் கூறுகையில் ''தமிழகம் வந்துள்ள இலங்கைத் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். மத்திய அரசிடம் தற்போது வந்துள்ள இலங்கைத் தமிழர்களை எப்படி கருதலாம் எனக் கேட்டுள்ளோம். மத்திய அரசின் முடிவு வரும் வரை அவர்களை முகாம்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

மேலும், சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட அகதிகளுக்கு ராமேசுவரம் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பிணை பெறப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x