Published : 27 Apr 2016 04:14 PM
Last Updated : 27 Apr 2016 04:14 PM
அடிப்படை வசதியில்லாததை கண்டித்து ஐந்து மலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், இந்தி ராநகர், நொச்சிஓடை ஆகிய மலைகிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை மேகமலை வன உயிரினக் காப்பகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால், வீடுகளில் மின்சா ரம் மற்றும் சாலை வசதி அமைக்கப்படவில்லை. இதனால், சோலார் மூலம் மின்வசதி பெற்றனர். சில மாதங்களுக்கு முன்னர் சோலாரும் பழுடைந்து விட்டது. இதன் காரணமாக, மண்ணெண்ணெய் விளக்கு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல வனத்துறையினரும் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஐந்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி, தங்களது வீடுகளில் நேற்று கருப்புக் கொடியை ஏற்றி வைத்தனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மலை கிராம மக்கள் சிலர் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் சாலை வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். தேர்தலின்போது வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்துச் செல்கின்றனர். தேர்தலுக்கு பின்னர் யாரும் இங்கு வருவதில்லை. எங்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை. எங்களது ரேஷன் கார்டுகளையும் விரைவில் ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT