Published : 19 Apr 2016 08:07 PM
Last Updated : 19 Apr 2016 08:07 PM
தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பிறகுதான் ஜெயலலிதாவுக்கு வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக வேட்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு, பாமக வேட்பாளர்களுக்கு தேர்தல் குறித்து பயிற்சி அளித்தனர்.
அப்போது, இந்த தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும்? வேட்பு மனுதாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை எவை? எவை?, தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே இருப்பதால் எப்படி ஆரோக்கியமான பிரச்சாரம் மேற்கொள்வது, பிரச்சாரத்தில் யாரையும் ஆபாசமாகவோ, மற்றவர்களின் மனம் புண்படும்படியோ பேசக்கூடாது,
வளர்ச்சித் திட்டம் பற்றி மட்டும் பேச வேண்டும், மக்களை வீடு, வீடாகச் சென்று சந்தித்து அன்புமணிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோர வேண்டும், வெற்றியை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டிய விதம் குறித்தும் வேட்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
''மக்களிடம் எங்களுக்கு அமோக ஆதரவு இருப்பதால் இத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்கிய பிறகுதான் அவருக்கு வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது. மழைவெள்ளத்தின்போது வீட்டிலிருந்து இருந்த ஜெயலலிதா, இப்போது தேர்தல் வந்துவிட்டதால் பிரச்சாரத்துக்காக வெளியே வந்துள்ளார். அதனால் மக்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். எனவே, இத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
திமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளது. அதிமுக, திமுக வேண்டாம் என்று நினைக்கும் மக்கள், எங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளனர். என்னால் மட்டும்தான் பூரண மதுவிலக்கைக் கொண்டு வர முடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள். என்னால் மட்டும்தான் விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்த முடியும் என்று விவசாயிகள் நினைக்கின்றனர். கொள்கை, கோட்பாடு, லட்சியம் என எதுவுமே இல்லாத மக்கள் நலக்கூட்டணியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதேயில்லை'' என்று அன்புமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT