Published : 04 Mar 2022 08:14 PM
Last Updated : 04 Mar 2022 08:14 PM

தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் சசிகலா: ஓபிஎஸ் சகோதரர் உடன் சந்திப்பு

தூத்துக்குடி: தென் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா திருச்செந்தூரில் சந்தித்துப் பேசினார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வி.கே.சசிகலா இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்யும் சசிகலா, தனது ஆதரவாளர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அவர், பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்டம் விஜயாபதி விசுவாமித்திரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனிடையே தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை தென்காசி செல்லும் சசிகலா, அங்கிருந்து கார் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து விமான மூலம் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில், இன்று திருச்செந்தூர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். பின்னர், திருச்செந்தூரில் தங்கியிருந்த சசிகலாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்துப் பேசினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் சசிகலா பேசியது: "அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை பார்க்கச் செல்கிறேன். தொண்டர்கள் என்னை நிச்சயம் சந்திப்பார்கள்" என்றார்.

முன்னதாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலர் சையதுகான், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர் இந்த தீர்மானம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி சேலம், எடப்பாடியில் உள்ள தனது வீட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது.

கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி கூறுகையில் ‘‘சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பலத்த தோல்வியை தழுவியுள்ளது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் பெரும் கவலை கொண்டுள்ளனர். அவர்களின் மனச்சோர்வை போக்க அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும்.

அவர்களது தலைமையில் கட்சி செயல்பட வேண்டும். அதிமுகவுக்கு ஒற்றை தலைமையே சரியானது. இரு தலைமைகள் இருப்பதால் இரு கோஷ்டிகள் போல செயல்படுகின்றனர்’’ எனக் கூறியிருந்தார்.

மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x