Last Updated : 27 Feb, 2022 01:16 PM

 

Published : 27 Feb 2022 01:16 PM
Last Updated : 27 Feb 2022 01:16 PM

கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் பல லட்சம் மோசடி: நடவடிக்கை கோரும் புதுச்சேரி அரசு ஊழியர் சங்கம்

புதுச்சேரி: மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க பல லட்சம் பணம் பறிக்கும் நெட்வொர்க் செயல்படுகிறது. இதில் தலைமைச் செயலர் உடன் நடவடிக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கவுரவத்தலைவர் பாலமோகனன், பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன், ஆலோசகர் கீதாஆகியோர் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: சுகாதாரத்துறையில் பணிக்காலத்தில் சுகாதார ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது வழக்கம், பணியில் உள்ள போது இறந்த சுகாதார ஊழியர்களின் வாரிக்கள், கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி தங்களின் மனுக்களை சமர்ப்பித்து உள்ளனர். பணிக்காக காத்திருக்கும் ககாதார ஊழியர்களின் வாரிசுகளை குறிவைத்து பணம் பறிக்கும் சம்பவம் நடந்துள்ளதுதான் வேதனை.

சுகாதார இயக்குநர் அலுவலகத்தில், வாரிசுதாரர் பணி நியமனம் சம்பந்தமான கோப்புகளைக் கையாள்வோர் தாங்கள் நேரடியாக ஈடுபட்டால் பிரச்சினை என்று கருதி, தங்களுக்கு மிகவும் நம்பகமான, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் லிஃப்ட் ஆபரேட்டராக பணிபுரியும் ராஜகுமார் என்பவரை ஏஜெண்ட்டாக நியமனம் செய்து அப்பாவிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர். பணம் பறிக்க ஒரு நெட்வொர்க்காகவே செயல்பட்டுள்ளனர்.

தாங்கள் பணம் கொடுத்ததை வெளியே சொன்னால் எங்கே. தங்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் விண்ணப்பதாரர்கள் இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை. வாரிசுதாரர் பணி நியமனத்திற்கு விண்ணப்பித்து. பணிக்காக காத்திருக்கும் மனுதாரர்களிடம், தான் சங்கத்தின் நிர்வாகி என்றும், என் தயவில்லாமல், என்னை மீறி யாரும் வாரிகதாரர் பணி நியமனம் பெற முடியாது என்றும் மிரட்டல் தொனியில் அவர் பேசி உள்ளார். அவரின் பேச்சு பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. மேலும் விண்ணப்பதாரர்களிடம், என் மூலமாக விண்ணப்பம் வந்தால்தான் இயக்குநர் அலுவலகத்தில் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையெனில் விண்ணப்பத்தை நிராகரிப்பார்கள் என்று பேசியுள்ளார். அலுவலகத்திலும் விண்ணப்பத்தை பெறாமல் ராஜ்குமார் மூலமே ஏற்பது வழக்கம். இந்த முறைகேடுகள் பற்றி கடந்த 2021 பிப்ரவரியில் தலைமைச் செயலர், சுகாதாரச் செயலர், சுகாதார இயக்குநர் ஆகியோரிடம் மனு தரப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழல் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் மனுவும் தரப்பட்டது.

அண்மையில் அவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண். சுகாதார இயக்குநருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதனடிப்படையில் கடந்த 25ம் தேதியன்று இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை, மருத்துவக் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. ரகசிய விசாரணை என்ற பெயரில் புகார் அளித்தவரையும், புகாருக்கு ஆளானவரையும் தனித்தனியாக விசாரிக்காமல், ஒன்றாக வைத்து விசாரணை செய்ததோடு. குற்றச்சாட்டு கூறியவரை நிற்க வைத்தும், குற்றச்சாட்டுக்கு ஆளானவரை அமர வைத்தும் விசாரணை செய்துள்ளனர். மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜகுமார். இந்த பிப்ரவரி 28 ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால். அவர் மீது கூறிய புகாரை வாபஸ் வாங்கிக் கொள் என்று புகார் கூறியவரை மிரட்டி கையொப்பம் பெற்றுள்ளனர்.

இதைப் பார்க்கும் போது குற்றம் சாட்டப்பட்ட ராஜகுமாரை காப்பாற்றும் நோக்கில் அதிகாரிகள் செயல்படுவதாக தோன்றகிறது. குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ராஜகுமார், இந்த மாதம் 28.02.2022 தேதியோடு பணி ஓய்வு பெறுகிறார். அவர் பணி ஓய்வு பெறுவதால், சுகாதாரத் துறைக்கும். அவருக்குமான தொடர்பு விட்டு போய்விடும். அதன் பிறகு அவர், துறை ரீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார். எனவே, வாரிசுதாரர் பணி நியமனத்தில் நடவடிக்கை எடுக்கவும். கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவர மேலும் எதிர்காலத்தில் வாரிசுதாரர் நியமனங்கள் நேர்மையாக நியாயமான முறையில் நடைபெறவும், முறைகேடுகளில் ஈடுபட்ட ராஜகுமாரை பணியிடை நீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட அனைவரிடமும், உயர்மட்டக்குழு அமைத்து, விசாரிக்க வேண்டும். இம்முறைகேட்டில் பல லட்சம் ஊழல் நடந்துள்ளது. அதிகாரிகள் பலரும் இதில் தொடர்பு உள்ளது. அதனால் தலைமைச் செயலரை மீண்டும் சந்திக்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x