Published : 22 Feb 2022 05:40 PM
Last Updated : 22 Feb 2022 05:40 PM

கொங்கு மண்டலத்தில் வெற்றி... திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: "அதிமுகவின் கோட்டை என்று சொன்ன கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளோம்" என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றிய நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின், "கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் இந்த வெற்றி. திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம்தான் இந்த வெற்றி.

அதிமுகவின் கோட்டை என்று சொன்ன கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளோம். இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. பொறுப்பு அதிகரித்துள்ளது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் எங்கள் மீது வைத்துள்ளனர். திமுக மீதான மக்களின் நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ள மக்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்கு காரணம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். தேர்தலுக்காக இல்லாமல் கொள்கைக்காக கூட்டணி அமைத்தோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதே திமுகவின் குறிக்கோள். உள்ளாட்சியில் பெண்களுக்கு தரப்பட்ட ஒதுக்கீட்டால், சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள்; இது திராவிட மாடல் புரட்சியாகும். எனவே வெற்றிபெற்ற அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்த வெற்றியை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். அமைதியாக கொண்டாடுங்கள். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணியை தொடர்ந்து கண்காணிப்பேன். திமுகவினர் தங்கள் மீது எந்தப் புகாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புகார் வந்தால் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்த எந்த நேரத்திலும் மக்களை சந்திக்க காத்திருக்கிறேன். அதற்கு தயாராக இருக்கிறேன்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x