Published : 20 Feb 2022 12:43 PM
Last Updated : 20 Feb 2022 12:43 PM

மீனவர்களை காக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவும்: ஜிகே வாசன்  வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பதும், பல்வேறு விதத்தில் துன்புறுத்துவதும், படகுகளை, மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவதும் பல ஆண்டுகளாக நீடிப்பது மிகவும் கவலைக்குரியது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களில் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழக மீனவக்குடும்பங்கள் துயரத்தில் இருக்கிறார்கள்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், சிறையில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் இது தொடர்பாக தொடர்ந்து அரசியல் கட்சிகள் கோரிக்கை வைப்பதும், பின்னர் காலம் கடந்து தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதும் தொடர் கதையாக நீள்கிறது. இதற்கு இரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. குறிப்பாக மத்திய அரசு, இலங்கை நாட்டிற்கு பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உதவிகள் செய்வது ஏற்புடையது.

அண்டை நாடான இலங்கை நாடும், அந்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும் என்று இந்தியா நினைத்து செயல்படும் அதே சமயம் இந்திய மீனவர்களின் மீன்பிடித் தொழிலையும் பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது இந்தியா, இலங்கையோடு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்திய மீனவர்களுக்கு இனிமேல் இலங்கையால் எவ்வித பாதிப்பும் இருக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் பேச வேண்டும். அதன் பின்னரே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்து மேம்படுத்தலாம்.

இரு நாட்டு நட்புறவு வலுப்பெற, இரு நாட்டு மக்களும் வளம் பெற இரு நாடும் ஒத்துழைப்போடு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயமும், அவசியமும் தேவை என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். மத்திய அரசு, இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x