Last Updated : 17 Feb, 2022 11:37 AM

 

Published : 17 Feb 2022 11:37 AM
Last Updated : 17 Feb 2022 11:37 AM

தஞ்சாவூர்: கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

ராஜசேகர்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) ஐஏஎஸ். அதிகாரியான எச்.எஸ். ஸ்ரீகாந்த் பணியாற்றி வருகிறார். இவரது வீடு புதுக்கோட்டை சாலையிலுள்ள அலுவலர்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ளது. இவரது கார் ஓட்டுநராகக் கூட்டுறவு காலனியை சேர்ந்த ராஜசேகர் (35) பணியாற்றி வந்தார். இவருக்குக் கூடுதல் ஆட்சியரின் வீட்டு மாடியில் தங்கிக் கொள்வதற்காகத் தனியாக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தற்போது தேர்தல் பார்வையாளராகத் திருநெல்வேலியில் ஏறத்தாழ 10 நாட்களாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கூடுதல் ஆட்சியரின் வீட்டு மாடியிலுள்ள அறையில் புதன்கிழமை இரவு தங்கியிருந்த ராஜசேகர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற் கூறாய்வுக்காகத் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இது குறித்து தெற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்கொலை எந்தப் பிரச்சினைக்குமே தீர்வாகாது. தற்கொலை எண்ணம் மேலோங்கும் போது தமிழக அரசின் இலவச ஹெல்ப்லைன் நம்பர் 104 தொடர்பு கொள்ளலாம். தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்வதற்கு சினேகாவின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்புக் கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x