Published : 16 Feb 2022 03:04 PM
Last Updated : 16 Feb 2022 03:04 PM

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; 50 லட்சமாவது பயனாளிக்கு முதல்வர் நேரில் மருத்துவ உபகரணங்கள் வழங்குகிறார்: அமைச்சர் தகவல்

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் 50 லட்சமாவது பயனாளிக்கு முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கேச் சென்று மருத்துவ உபகரணங்களை வழங்க இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

"முதல்வர் அறிவுறுத்தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (16-02-2022) சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 35 கோடி ரூபாய் செலவிலான ரோபாடிக் அறுவை சிகிச்சை அரங்கப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

"சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன எந்திர அறுவை சிகிச்சை மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை மருத்துவ உபகரணங்கள் ரூ.35 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்கான அரங்கம் என்கிற வகையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரங்கம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை நானும், மருத்துவத் துறை செயலாளர் மற்றும் மருத்துவர்கள் இன்று ஆய்வு செய்திருக்கிறோம். விரைவில் ரூ.35 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள Advanced robotic surgery centre முதல்வர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு பிறகு அர்ப்பணிக்கிற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த அதிநவீன எந்திர சிகிச்சை மாநில அரசு நடத்துகிற மருத்துவமனையில் முதன்முறையாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் அமைய இருக்கிறது.

புற்றுநோய் என்பது ஆபத்தான ஒரு நோயாகும். இதில் முதல் நிலை, 2 வது நிலைகளிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை முதல்வரின் வழிகாட்டுதலின்படி அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காகத்தான் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து ‘கேன்சர் ரிஜிஸ்டிரி’ தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புற்றுநோயில் 3வது, 4வது நிலை வரும்போது புற்றுநோயிலிருந்து உயிரைக் காப்பாற்றுவது அரிதானது என்ற காரணத்தினால், முதல் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள புற்றுநோயாளிகளைக் கண்டறிவதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் விரைவுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை அதிநவீன சிகிச்சைக்காக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காரப்பேட்டை, மதுரை, சேலம் மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்கும் பணிகள்

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புற்று நோயினால் இறப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைப்பதற்கு இந்த அரசு ஏராளமான பணிகளை செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட்.5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 49 லட்சத்து 79 ஆயிரத்து 565 நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் மருத்துகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தினந்தோறும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை பயனடைகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மருந்துகள் போன்ற வசதிகளை வீடுகளுக்கே சென்று செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பேலியேட்டிவ் கேர், பிசியோ தெரபி மற்றும் சிறுநீரக சுய டயாலிசிசிஸ் பைகள் வழங்கப்படுவது என்று உலக அளவில் பேசப்படும் திட்டமாக உள்ளது.

பிப்.20ம் தேதி காலை 50 லட்சமாவது பயனாளியை சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பயனாளியின் வீட்டிற்கேச் சென்று மருத்துவ உபகரணங்களை முதல்வர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ளதால், 20ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைககள் அமலில் இருப்பதால் ஊரகப் பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளை நடத்தலாம் அதற்கு தடை இல்லை என்பதால் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் நடத்தப்படுகிறது.

ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 188 அவசர சிகிச்சை ஊர்திகள் அதிநவீன உயிர்காக்கும் உபகரண்ஙகள் பொறுத்தப்பட்ட வாகனங்கள் முதல்வரால் சித்தாலப்பாக்கத்தில் துவக்கி வைக்க இருக்கிறார்கள். கடந்த 2008ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி தொடங்கி வைத்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 1,303 அவசர கிசிச்சை ஊர்திகள் செயல்பாட்டில் உள்ளது. இதில் புதியதாக 188 அவசர சிகிச்சை ஊர்திகள் சேர்த்து 1,491 அவசர சிகிச்சை ஊர்திகள் பயன்பாட்டில் வர உள்ளது. இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் இந்த அவசர சிகிச்சை ஊர்திகள் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

முதல்வர் டிசம்பர் 18ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காப்போம் 48 திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எங்கு விபத்து நடந்திருந்தாலும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும்கூட அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 18,580 பேர் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 48 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அரசு சார்பில் ரூ.1 லட்சம் செலவளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் 16 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்து 95 ரூபாய் அரசு சார்பில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவழிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத்திற்கு ரூபாய் 258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 160 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்திற்கு ஏற்கெனவே 609 மருத்துவமனைகள் பயன்பாட்டில் உள்ளது. அது தற்போது 640 மருத்துவமனைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 218 அரசு மருத்துவமனைகள் மற்றும் 422 தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் பயன்பாட்டில் உள்ளது. பெருந்தொற்றுக் காலத்தையும் தாண்டி மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 திட்டங்கள் இந்தியாவிலே, உலக அளவிலேயே தமிழகத்தில் வெற்றிக்கரமாக மருத்துவத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு முன்னுதாரணமான திட்டங்களாக இருக்கிறது. என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர் விமலா மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்."

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x