Published : 15 Feb 2022 07:13 PM
Last Updated : 15 Feb 2022 07:13 PM

மக்களைப் பொறுமை காக்க சொல்லும் உதயநிதிக்கு பாடம் புகட்டுங்கள்: ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ‘‘குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை பற்றி கேட்டால், ’இன்னும் நான்கு மாதம், 4 வருடங்கள் இருக்கிறது, பொறுத்திருங்கள்’ என்று கூறுகிறார் உதயநிதி. அதற்கு இந்த நகர்ப்புற தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்’’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசினார்.

திருமங்கலம் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, "9 மாதங்களில் ஒரு ரூபாய் கூட மக்கள் நலனுக்காக திமுக நிதியை ஒதுக்கவில்லை. பொங்கல் பரிசத் தொகுப்பில் மட்டும் 65 சதவீத கமிஷனை திமுக பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாது 7 பேர் விடுதலை, மாணவர்களின் கல்வி கடன் ரத்து என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் சென்ற உதயநிதியிடம் மக்கள் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு ’இன்னும் நான்கு மாதம், 4 வருடங்கள் இருக்கிறது, பொறுத்திருங்கள்’ என்று கூறுகிறார். அதற்கு இந்த நகர்ப்புற தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

நகைக்கடன் தள்ளுபடி என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். இவர்களை நம்பி 48 லட்சம் நபர்கள் அடமானம் வைத்து இருந்தனர் ஆனால், தற்போது 13 லட்சம் பேருக்கு மட்டும்தான் தள்ளுபடி 35 லட்சம் நபர்களுக்கு தள்ளுபடியும் கிடையாது என்று கூறிவிட்டனர்” என்றார்.

இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் திருமங்கலம் நகர செயலாளர் ஜே.டி விஜயன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், திருமங்கலம் ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் ஆண்டிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x