Published : 13 Apr 2016 11:07 AM
Last Updated : 13 Apr 2016 11:07 AM

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு போட்டி?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குஷ்புவை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள குஷ்பு, "கட்சி மேலிடம் விரும்பினால் தான் ஆர்.கே.நகரில் போட்டியிட தயார்" எனக் கூறியிருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதியிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுக ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு திமுக - காங்கிரஸ் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதால் இத்தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக இத்தொகுதியில் திமுக தரப்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனை களத்தில் இறக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது, ஆர்.கே.நகரை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க திமுக தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.

மயிலாடுதுறை, சிவகங்கை போன்ற தொகுதிகளையும் காங்கிரஸ் கேட்டதாகவும், ஆனால் ஆர்.கே.நகரை மட்டுமே விட்டுக்கொடுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x