Published : 13 Feb 2022 12:23 PM
Last Updated : 13 Feb 2022 12:23 PM

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் மோதி விசைப்படகு சேதம்: மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் மோதிய விசைப்படகு.

ராமேசுவரம்

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் மீது மோதி விசைப்படகு சேதமடைந்தது குறித்து மீன்வளத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பாக் ஜலசந்தி கடல் பகுதியிலிருந்து விசைப்படகு ஒன்று பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைக் கடந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு நேற்று செல்ல முயன்றது. அப்போது கடல் நீர்மட்டம் அதிகரித்ததால் விசைப்படகின் மேற்கூரை தூக்குப் பாலத்தின் மீது மோதி சேதமடைந்தது. உடனடியாக விசைப்படகின் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல் பட்டு பாம்பன் பாலத்தின் தூண்கள் மீது மோதாமல் லாவகமாக விசைப்படகை ஓட்டிச் சென்றார்.

அதைத்தொடர்ந்து தூக்குப் பாலத்தை ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் பாலத்துக்கு சேதம் ஏற்படவில்லை எனத் தெரிய வந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ரயில்வே அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x