Published : 09 Apr 2016 09:35 AM
Last Updated : 09 Apr 2016 09:35 AM

‘அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது’: நாகர்கோவில் வேட்பாளர் மகன் வாட்ஸ் அப் பேச்சால் பரபரப்பு

`அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது’ என்று, நாகர்கோவில் எம்.எல்.ஏ. வும், நடப்பு வேட்பாளருமான நாஞ்சில் முருகேசனின் மகன், தனது நண்பர்களிடம் பேசும் வீடியோ ஒன்று, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நாஞ்சில் முருகேசன். தற்போதைய தேர்தலில் இத்தொகுதி வேட் பாளராக முதலில் டாரதி சேம்சன் அறிவிக்கப்பட்டார். பின்னர், வேட்பாளர் மாற்றப்பட்டு நாஞ்சில் முருகேசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாஞ்சில் முருகேசனின் மகன் சிவராம், தனது நண்பர்களிடம் பேசும் வீடியோ ஒன்று, வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிவராம் தனது நண்பர்களுக்கு சவால் விடும் வகையில் பேசியிருப்பதாவது: `செலவு செய்தால்தான் எம்.எல்.ஏ. ஆக முடியும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. நான் கூறியதுபோல், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டை விட்டு போய் விடுவீர்களா?’ என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு நிமிட வீடியோ, தற்போது குமரி மாவட்டத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக வெற்றிபெறாது என அக்கட்சியின் வேட்பாளரின் மகனே பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாட்ஸ் அப் விவகாரத்தை கட்சித் தலைமைக்கு நாஞ்சல் முருகேசனின் எதிரணியினர் கொண்டு சென்றுள்ளனர்.

ஏற்கெனவே, அதிமுகவில் பல முறை வேட்பாளர்கள் பட்டியல் மாற்றப்பட்டு வரும் நிலையில், இந்த வீடியோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கெனவே வேட்பாளர் பட்டியல் அடிக்கடி மாற்றப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்திலும் நாகர்கோவில் வேட்பாளர் மாற்றப்படலாமா என சந்தேகம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x