Published : 04 Feb 2022 12:17 PM
Last Updated : 04 Feb 2022 12:17 PM

பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: பெத்தேல் நகர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை காலி செய்வது தொடர்பாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் வழங்குவது குறித்து பரிசீலிக்க தயார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெத்தேல்நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் அண்ணாதுரை தாக்கல் செய்த மனுவில், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடில்லா ஏழை மக்கள் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். தமிழக அரசு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது. வீட்டு வரி, குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகிறோம். ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் இங்கு வசிப்பவர்களுக்க வழங்கப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு பட்டா கோரி அரசுக்கு விண்ணப்பித்த நிலையில், 15 ஆண்டு கால போராட்டங்களுக்கு பின் அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவும் பிறப்பித்ததுள்ளார்.

அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டதால், மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த நேரத்திலும் வீடுகள் இடிக்கப்படலாம் என்பதால், தங்களை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும். அரசின் மக்கள் நலத்திட்டப்படி எங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டப்படி அமல்படுத்தி, பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது நீதிபதிகள், மக்கள் நலத் திட்டத்தில், மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வகை செய்துள்ளது என்பதால் இந்த இடத்தை காலி செய்ய தயார் என உத்தரவாதம் அளித்தால் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், நீதிமன்ற உத்தரவின்படி, தற்போதைய இடத்தை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான மனுதாரர் சங்க கோரிக்கையை பரிசீலிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக விளக்கமளிக்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, விசாரணையை பிப்ரவரி 9-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x