Published : 04 Feb 2022 12:07 PM
Last Updated : 04 Feb 2022 12:07 PM

ஜாக்குலினை விட்டுவிடுங்கள்; அவர் என்னை எந்தவித எதிர்பார்ப்புமின்றி காதலித்தார்- இடைத்தரகர் சுகேஷ் வேண்டுகோள்

நடிகை ஜாக்குலின் தன்னை எந்தவித எதிர்பார்ப்புமின்றி காதலித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர்.

அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர், ரூ.2000 கோடி பணமோசடி வழக்கில் 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாகக் கூறிய சுகேஷ் சந்திரசேகர், அவ்விருவரின் மனைவிகளிடமிருந்து ரூ.200 கோடி பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உட்பட8 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின்போது, சுகேஷ் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பெர்சிய பூனைகள் உட்பட ரூ.10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ஜாக்குலின் தவிர, மற்றொரு பாலிவுட் நடிகையான நூரா ஃபதேயிக்கும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை சுகேஷ் பரிசளித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜாக்குலினும் நூரா ஃபதேயியும் அமலாக்கத் துறையினால் விசாரிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாக்குலின் - சுகேஷ் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

இந்நிலையில் சிறையில் இருக்கும் சுகேஷ் இந்த விவகாரம் தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது வழக்கறிஞரிடம் அவர் கொடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

“தனிப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருவது மிகுந்து வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதை நான் கடந்த வாரம் செய்திகளின் மூலம் தெரிந்து கொண்டேன். இது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைவதாகும். நான் முன்பே குறிப்பிட்டதைப் போல நானும் ஜாக்குலினும் காதலித்தோம். நீங்கள் கேலி செய்வதைப் போல, விமர்சிப்பதைப் போல எங்கள் காதல் பணத்தின் அடிப்படையில் உருவானதல்ல. எங்களுக்கிடையில் இருந்த உறவு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. தயவுசெய்து ஜாக்குலினை தவறாகக் காட்டவேண்டாம். அவர் என்னை எந்த எதிர்பார்ப்புமின்றி காதலித்தார். இந்த வழக்குக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் என்னை காதலித்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை”

இவ்வாறு சுகேஷ் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x