Published : 31 Jan 2022 07:26 AM
Last Updated : 31 Jan 2022 07:26 AM

தேர்தல் பணி பயிற்சியை புறக்கணித்தால் நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பணி பயிற்சியில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்குமாறு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது.வழக்கம்போல, தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்டமாக தேர்தல் பணி பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்ட பயிற்சி வகுப்பு இன்று (ஜன.31) நடைபெறுகிறது.

பிப். 9, 18-ம் தேதிகளில் அடுத்தகட்ட பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.

இந்நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்:

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சை இருந்தால், அதற்கான ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம். தவறான காரணம் கூறி,தேர்தல் பணியை புறக்கணித்ததாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை, தேர்தல் ஆணையம் வழங்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x