Published : 28 Apr 2016 01:01 PM
Last Updated : 28 Apr 2016 01:01 PM

ஆலங்குடியில் இணைந்த இரு துருவங்கள்: திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி; மாற்றுக் கட்சியினர் அதிர்ச்சி

திமுகவில் எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்டவர்கள் ஆலங்குடியில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இணைந்தது கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ஜி.சதீஷ் கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.பி.கே.தங்கவேலு தலைமையில் சதீஷ், கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

இவரை மாற்ற வேண்டுமென அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவர் சிவ.வீ.மெய்யநாதன் தரப்பினர் தொகுதியெங்கும் ஒரு வாரம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து டாக்டர் ஜி.சதீஷை மாற்றிவிட்டு புதிய வேட்பாளராக சிவ.வீ.மெய்யநாதனை திமுக தலைமை அறிவித்தது. இதற்கு சதீஷ் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்குடி தொகுதியில் திமுகவினர் இரு கோஷ்டியாக செயல்படும் சூழல் நிலவியது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பான கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆலங்குடியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.கே.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதில், ஒரு தரப்பினர் இறுக்கமான மனநிலையில் இருந்தனர்.

கூட்டம் தொடங்கியதும் ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் சதீஷ், தற்போதைய வேட்பாளர் சி.வீ. மெய்யநாதன் ஆகியோர் மேடையில் ஆரத் தழுவிக்கொண்டனர். எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்டவர்கள் ஒன்றிணைந்தது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவினரின் கோஷ்டி மோதலால் தேர்தலில் எளிதில் வென்றுவிடலாம் என்று கருதிய மாற்றுக் கட்சியினருக்கு, திமுகவின் இருதரப்பும் ஒன்று சேர்ந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x