Published : 02 Apr 2016 07:53 PM
Last Updated : 02 Apr 2016 07:53 PM
பிகாரைப் போல தமிழகத்திலும் மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடத்தில் மது அருந்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை என கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ஆனால், கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் எனக் கூறி மதுவிலக்கு அமல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது. பிகாரின் முடிவுக்கு பிறகாவது தமிழகத்திலும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். மதுவால் குடும்பங்கள் சீரழிந்து விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தாலிக்கு தங்கம் தந்து இரட்டை வேடம் போடுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்து போடப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். எனவே, பிகாரைப் போல தமிழகத்திலும் மதுவிலக்கு வேண்டுமானால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய வழக்கறிஞர் ராஜூ உள்ளிட்ட 6 பேர் மீது தேச விரோதச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT