Published : 19 Jan 2022 07:50 AM
Last Updated : 19 Jan 2022 07:50 AM

பாடக் குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: பாடக் குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும் பல்வேறு செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களின் செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலை தொடர்பாக ஆய்வுக் கூட்டம், கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி மண்டலவாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் தலைமையில் விழுப்புரத்தில் மண்டல ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டன. அப்போது, பல்வேறு ஆசிரியர்கள் முறையாக பாடக்குறிப்பேடு எழுதாமல் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்:

பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பாடக் குறிப்பேடு எழுதாமல் உள்ளனர். சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை. ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பாடம் நடத்துகின்றனர். இதை மாற்றி அந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச அறிவுறுத்த வேண்டும்.

இதுதவிர, பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் வளாகங்களை சுற்றிவந்து ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x