Published : 21 Apr 2016 10:07 AM
Last Updated : 21 Apr 2016 10:07 AM

வாக்காளர் வாய்ஸ்: என் வாக்கு என் உரிமை!

இந்த வாரத்துக்கான தலைப்பு:



வாக்குக்காக பணமோ, ‘பரிசு’ பொருளோ அளிக்க அரசியல் கட்சிகள் தேடி வந்தால்... அவர்களை மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஓட்டுக்கு ‘லஞ்சம்’ கொடுப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சாமானிய மனிதர்களால் முடியுமா? அதிலுள்ள பிரச்சினைகள் என்னென்ன? நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய வகையில் யோசனைகளைச் சொல்லுங்கள்...

நீங்கள் பதிவு செய்த யோசனைகள் இந்த வாரம் சனிக்கிழமை வரை இங்கு வெளியாகும். இப்போதுகூட நீங்கள் 044-42890002 எண்ணுக்கு அழைத்துப் பதிவு செய்யலாம். அடுத்த வாரத்துக்கான கேள்வி வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.

மகேந்திரன், போரூர்

வாக்காளர்களுக்கு பணம் தருவதைப் பொருத்தவரை, யாருக்கு தர வேண்டும் என்பது அரசியல்வாதிகளுக்கு நன்றாகத் தெரியும். உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் அவர்கள் எதுவும் வழங்குவதில்லை. அன்றாடங்காய்ச்சிகள், தினக்கூலி வேலைகளுக்குச் செல்பவர் போன்றோருக்குத்தான் பணம் வழங்குகிறார்கள். ஏனெனில் இவர்களால் வாக்குப் பதிவு தினத்தில் வேலைக்கு செல்ல முடியாது. இவர்களும் அன்றைய தினத்துக்கான கூலி கிடைக்கிறதே என்ற காரணத்துக்காகத்தான் பணம் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் வாக்களிக்கும்போது தெளிவாகவே வாக்களிக்கிறார்கள். யாரை அவர்களுக்கு பிடிக்கிறதோ அவர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள். மக்களால் அரசியல்வாதிகளை சட்டத்துக்கு முன் நிறுத்தவும் முடியாது. அவர்களுடன் சண்டை போடவும் முடியாது. அதற்குரிய வலிமையும் மக்களிடம் இல்லை.

ஜவஹர், முகலிவாக்கம்

வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் என்று வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்பதை ஏன் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கக் கூடாது. இந்த உறுதிமொழியை கட்டாயமாக எடுக்கச் சொல்ல வேண்டும். இதன் பின்பும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்துவிட்டு எஞ்சிய வேட்பாளர்களைக் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும்.

எஸ்.லெட்சுமிபதி, தாம்பரம்

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று நாடே ஊழலில் சிக்குற்று கிடக்கும் நிலையில், வாக்குக்காக பணமோ, பரிசுப்பொருளோ பெற்றுக் கொண்டு வாக்களிப்பதை வாக்காளர்கள் குற்றமாக கடுகளவும் கருதுவதில்லை. வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்குக் கேட்பதும், வாக்காளர்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதும் ஒரு சடங்காக மாறிவிட்ட அவலநிலையில் சாமானிய மனிதர்களால் இதில் என்ன செய்ய முடியும்.

விதிவிலக்காக ஒருசிலர் லஞ்சம் வாங்குவதை விரும்பவில்லை என்றாலும்கூட அவர்களும் நமக்கேன் வீண் வம்பு, மற்றவர்களிடம் பொல்லாப்பு என நினைத்து கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். எனவே லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் ஜனநாயக படுகொலைக்குச் சமம் என்று மக்களிடையே எடுத்துக்கூறி அவர்களி டையே போதிய விழிப்பு ணர்வையும், புதிய எழுச் சியையும் ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் தார் மீகப் பொறுப்பாகும்.

ராஜலிங்கம், மயிலாப்பூர்

வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது ஜனநாயக படு கொலைக்கு சமமானது. வேட்பாளர்கள் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க உளவுப் பிரிவைப் போல, எளிதில் அடையாளம் காண முடியாத உளவுப்பிரிவை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு இலவச தொலைபேசி எண்ணை அறிவித்து, அந்த எண்ணை அனைத்து இடங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும். அதில் புகார் பதிவானால் உடனடி யாக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், காவல் துறையினருக்கு தனி வகுப்புகளை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க முழு ஒத்துழைப்பு தேவை, மீறி தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க வேண்டும். படிப்படியாக கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி, பணம் வாங்குவது உண்மையிலேயே மன்னிக்கமுடியாத குற்றம் என மக்கள் மனதில் தோன்ற வைக்க வேண்டும்.

முத்துராமன், அரும்பாக்கம்

தண்டனைகள் கடுமையானால் மட்டும் தான் தவறுகள் குறையும். அந்த வகையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குறைய வேண்டு மெனில் தண்டனைகள் கடுமை யாக்கப்பட வேண்டும். ஒரு தொகுதி யில் வேட்பாளர் ஏதேனும் பரிசுப் பொருளையோ, அல்லது பணத்தையோ கொடுத்து வாக்கு பெற முயற்சிக்கின்றார் எனில், அது குறித்து ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் பொழுது அவர் வேட்பாளர் என்னும் தகுதியையே ரத்து செய்ய வேண்டும்.

சில வேட்பாளர்கள் அதையும் மீறி, இலவசங்களை விநியோகித்துக் கொண்டே குடும்பத்தில் வேறு யாரையும் போட்டியிட வைத்து விடவும் வாய்ப்புண்டு. இதனால் வேட்பாளர் மட்டுமல்லாது அவரது குடும்பத்திலேயே யாரும் தேர்தலை சந்திக்கக் கூடாது என தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இதே போல் வாக்குக்கு பணம் வாங்கும் வாக்காளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு அவர்களது குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு ரேஷன் பொருள் தொடங்கி, அரசின் எந்தவித சலுகைகளும் கிடைக்காது என்ற அச்ச உணர்வு, பணத்துக்கு விலைபோகாத வாக்காளனை வார்த்தெடுக்கும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x