Published : 05 Jan 2022 10:23 AM
Last Updated : 05 Jan 2022 10:23 AM

விழுப்புரம்: பாம்பை காப்பாற்ற முயன்று விபத்தில் சிக்கிய பேருந்து

விழுப்புரம்: சென்னையில் இருந்து நேற்று காலை மதுரைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை மதுரை, கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் காமராஜ் ஓட்டிச் சென்றார்.

தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியை இந்தப் பேருந்து கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று சாலையை கடந்தது. இதைக் கவனித்த ஓட்டுநர் காமராஜ், பாம்பின் மீது அடிபடாமல் இருப்பதற்காக பேருந்தை வலது பக்கம் திருப்பினார்.

இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ‘சென்டர் மீடியன்’ மீது ஏறி, இணைப்புச் சாலையில் அரசூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த அறிவுக்கரசன் படுகாயமடைந்தார். உடனே, அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். விபத்திற்கு காரணமான பாம்பு எந்த சலனமும் இன்றி சாவகாசமாக சாலையை கடந்து சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x