Published : 18 Mar 2016 11:54 AM
Last Updated : 18 Mar 2016 11:54 AM

பாஜகவால் மாற்றம் வரும்: நடிகர் விஜயகுமார் உறுதி

பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜயகுமார். தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து வரும் விஜயகுமார் திடீரென்று தன்னை கட்சியில் இணைத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டது ஏன் என்று கேட்ட போது "யாருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை தேர்தல் நேரத்தில் தான் பிரதிபலிக்க முடியும். பிரதமர் பதவிக்கு மோடி போட்டியிடும் போதே அவர் மீது தனிமரியாதை உண்டு. அனைத்து வெளிநாடுகளுமே இந்தியாவை மிகப் பெருமை வாய்ந்த நாடாக தெரிந்து கொள்வதற்கு காரணம் மோடி தான். அதுமட்டுமன்றி ஒரு ஊழலற்ற ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். எல்லா மாநிலங்களில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது என்றால் மிகச் சிறப்பாக இருக்கும்.

அதனால் தான் அக்கட்சியின் வளர்ச்சிக்கு நம்மளும் ஒரு தூண்டுகோலாக இருப்போம் என்று என்னை இணைத்துக் கொண்டேன்” என்றார்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதே என்று கேட்ட போது, "ஒவ்வொரு கட்சியும் அவர்களுக்கு என்று தனிக் கொள்கைகள் வைத்திருக்கிறார்கள். அனைவருமே ஒன்றாக சேர்ந்து நின்றால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. கூட்டணியில் சேர்வது சேராதது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். பாரதிய ஜனதா என்பது ஒரு மாநிலக் கட்சியல்ல, அது ஒரு தேசியக் கட்சி. அனைத்து மாநிலங்களில் பாரதிய ஜனதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது உடனடியாக மோடி வந்து சுற்றிப் பார்த்து, 2000 கோடி கொடுத்து, அதற்கு என்று தனியாக ஒரு குழு அமைத்தார். மத்திய அரசின் கடமையாக இருந்தாலும், அதை மோடி உடனடியாக செய்தார். அது தான் அதில் சிறப்பு. தமிழ்நாடு நல்லாயிருக்கணும், இங்குள்ள மக்கள் சிறப்பாக இருக்கணும் என்று நினைப்பவர் மோடி. ஒரு கட்சி திட்டம் போட்டால் மற்றொரு கட்சி அது வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடுகிறது. நல்ல விஷயங்கள் எதுவுமே நடக்க மாட்டுக்கிறதே என்று மோடி நினைக்கிறார். இப்படி எல்லாம் பிரச்சினைகள் இருந்து வருகிறது. ஆகவே தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பான மாற்றத்தை பாரதிய ஜனதாவால் கொண்டு வர முடியும்

பாரதி ஜனதாவுக்கு ஆதரவுக் கேட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவிருக்கிறேன். விரைவில் எந்த தொகுதியில் எப்போதும் பிரச்சாரம் என்று இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்வேன்" என்று தெரிவித்தார் விஜயகுமார்.

அதிமுகவின் 5 ஆண்டுக்கால ஆட்சிக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது, "அதான் தமிழகம் முழுவதும் மக்களே சொல்கிறார்களே நான் என்ன சொல்றது. நல்லாட்சி வேண்டும் அது தான் முக்கியம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x