Published : 29 Dec 2021 02:41 PM
Last Updated : 29 Dec 2021 02:41 PM

மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட அரியவகை ரத்தம்: சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை

வயிற்றில் சிசு உயிரிழந்த நிலையில் ரத்த சோகையுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு மும்பையில் இருந்து அரிய வகை ரத்தம் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ரத்த சோகை மற்றும் வயிற்றில் சிசு உயிரிழந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ளனர். அந்தப் பெண்ணுக்கு மிகவும் அரிய ரத்த வகையான பாம்பே-நெகட்டிவ் என்ற ரத்த வகை இருந்த நிலையில், ரத்தப் பரிசோதனையில் அவருக்கு ஹிமோகுளோபின் அளவு 4.9 கி இருப்பது கண்டறியப்பட்டது.

அவருக்கு ரத்தம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் மருத்துவமனை ரத்த வங்கியில் அவரது ரத்த வகை இல்லை.

இந்நிலையில், கேரள மாநிலம் குருவாயூரைச் சேர்ந்த பாம்பே-நெகட்டிவ் வகை ரத்தம் உள்ளவர் ரத்த தானம் செய்தார்.

இதையடுத்து, அந்த பெண்ணுக்கு ரத்தம் செலுத்தி, சிகிச்சையின் மூலம் அவரது வயிற்றில் உயிரிழந்த நிலையில் இருந்த சிசு அகற்றப்பட்டது.

மேலும், அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில், அந்த வகை ரத்தம் கிடைக்கவில்லை. இதையடுத்து, மும்பையில் இருந்து அந்த வகையைச் சேர்ந்த ஒரு யூனிட் ரத்தம் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து குளிர்சாதன வசதியுடைய சிறப்பு வாகனம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அப்பெண்ணுக்கு ரத்தம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்த மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் சுபா, மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் மருத்துவர் ரவீந்திரன், மருத்துவர் மணிமேகலை, மருத்துவர் சண்முகவடிவு உள்ளிட்டோரை மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x