Last Updated : 29 Dec, 2021 02:16 PM

 

Published : 29 Dec 2021 02:16 PM
Last Updated : 29 Dec 2021 02:16 PM

என் வெற்றிக்கு என் தந்தைதான் முழுக் காரணம்; அவர் இல்லாவிட்டால் இந்த நிலை இல்லை: முகமது ஷமி உருக்கம்

செஞ்சூரியன்: "கிரிக்கெட்டில் என்னுடைய வெற்றிக்கு முழுக் காரணம் என் தந்தைதான். அவர் இல்லாவிட்டால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது" என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்தார்.

செஞ்சூரியனில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி 327 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி தனது 200-வது விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

இதன்மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது இந்திய வீரர் எனும் பெருமையை ஷமி பெற்றார். இதற்கு முன் கபில் தேவ், இசாந்த் சர்மா, ஜஹவல் ஸ்ரீநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த இன்னிங்ஸுக்குப் பின் முகமது ஷமி அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் பிரவீண் பாம்பரேவுக்கு பிசிசிஐ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: "தரவரிசையில் வருவதற்கும், முத்திரைபதிக்கப் போராடும்போது ஒருவர் என்ன சாதிப்பார் என கனவுகூட காண முடியாது. ஆனால், கடினமாக உழைத்தால் உங்களால் நிச்சயமாக முடிவகளைப் பெற முடியும். டெஸ்ட் போட்டி என்பது ராக்கெட் சயின்ஸ் அல்ல. டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளராக இருந்தால், லைன் லென்த் தெரிந்திருக்க வேண்டும், ஆடுகளம், காலச்சூழல் தெரிந்து அதற்கு ஏற்றார்போல் பந்துவீச வேண்டும்.

இன்று என்னுடைய இந்த வெற்றிக்கு முழுக் காரணம் என் தந்தைதான். கடந்த 2017-ம் ஆண்டு என்னைவிட்டு அவர் காலமாகிவிட்டார். என்னை உருவாக்கியதும், செதுக்கியதும் அவர்தான். உத்தரப் பிரதேசத்தில் அம்ரோஹாவில் சஹாஸ்பூர் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நான் கிரிக்கெட் விளையாடும்போதும், பயிற்சி எடுக்கும்போது எந்த வசதியும் இல்லை.

நான் சிறுவயதில் கிரிக்கெட்பயிற்சிக்கு செல்லும்போது என்னை 30 கி.மீ சைக்கிளில் அமரவைத்து அழைத்துச் சென்றது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த காலங்களில் சூழல்களில் அவர்களின் என்மீதான முதலீடுதான் இன்று சாதிக்கிறேன்.

கரோனா லாக்டவுன் காலத்தில் என்னுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான இலவச உணவு, நிதியுதவி, பேருந்து வசதிகளைச் செய்து கொடுத்தேன். என் மீது என் குடும்பம் மதிப்பு வைத்துள்ளது. நான் ஈட்டிய பணத்தை கரோனா காலத்தில் கடினமான நேரத்தில் தேவையானவர்களுக்கு உதவினேன்.

என்னுடைய மக்களுக்குச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்; என்னுடைய குடும்பத்தார் அரசியல் சார்ந்தவர்கள், மக்களுக்கு தேவையான உதவிகளை அவர்கள் செய்துவருவதால், உதவுதல் என்பது என் ரத்தத்தில் கலந்திருக்கிறது.

நீங்கள் கடினமாக உழைத்தால், அல்லாஹ் நிச்சியம் வெற்றியைத் தருவார். ஆனால், எப்போதும் உங்கள் சொந்த மக்களைக் கைவிடக்கூடாது" என்று ஷமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x