Published : 29 Dec 2021 07:33 AM
Last Updated : 29 Dec 2021 07:33 AM

வகுப்பறையை சுத்தம் செய்தபோது விரல் துண்டான மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு

மதுரையில் வகுப்பறையை சுத்தம் செய்தபோது மேஜை விழுந்து கால் விரல் துண்டான மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கீழ உரப்பனூரைச் சேர்ந்தவர் பி.ஆதிசிவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: என் மகன் சிவநிதி. திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2015-ல் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24.6.2015-ல் வகுப்பாசிரியர் மாணவர்களை வகுப்பறையை சுத்தம் செய்ய வைத்தார். அப்போது மேஜை விழுந்து சிவநிதியின் இடது கால் பெருவிரலுக்குப் பக்கத்து விரல் துண்டானது. உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி டி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதிடுகையில், மனுதாரரின் மகன் இந்திய ராணுவத்தில் சேர விரும்பினார். கால் விரல் துண்டானதால் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது என்றார்.

பள்ளி நிர்வாகம் சார்பில், மனுதாரர் முதல் நாள் விடுமுறை கடிதம் அளிக்காமல் விடுமுறை எடுத்திருந்தார். மறுநாள் அவசரம் அவசரமாக வகுப்பறைக்கு சென்ற போது அவர் காலில் அடிபட்டது. அப்போது வகுப்பறையில் யாரும் இல்லை. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களை வகுப்பறையை சுத்தம் செய்யக் கூறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பள்ளி நிர்வாகத்தின் மெத்தனத்தால் மனுதாரர் மகனின் காலில் ஒரு விரல் துண்டாகியுள்ளது. இதனால் மனுதாரருக்கு அரசு 4 வாரத்தில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப் படாமல் இருப்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிசெய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x