Published : 07 Mar 2016 08:48 AM
Last Updated : 07 Mar 2016 08:48 AM

ஆலந்தூர் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் பணி நிறைவு: ஜிஎஸ்டி சாலையில் தடுப்புகளை அகற்றும் பணிகள் மெத்தனம் - குறுகிய சாலையில் மேடு, பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் ஆலந்தூர் விமான நிலையம் இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்டி சாலையில் இரும்பு தடுப்புகள் அகற்றாமல் இருக்கின்றன. இதனால், குறுகியுள்ள சாலையில் மேடு, பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சென்னையில் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் முடிந்துள்ளன.

கடந்த வாரம் முதல் கட்டமாக சோதனை ஓட்டமும் தொடங்கியுள்ளது. சின்னமலை ஆலந்தூர் பரங்கிமலை விமான நிலையம் இடையே இன்னும் ஒரு வாரத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. இதற்கான, பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக கிண்டி கத்திப்பாராவில் இருந்து விமான நிலையம் வரையில் ஜிஎஸ்டி சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உயர்மட்ட பாதையில் இரும்பு தூண்களைக் கொண்டு பணிகள் நடந்தன. தற்போது, பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள தடுப்புகள் அகற்றப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, ‘‘ஜிஎஸ்டி சாலையில் கிண்டி முதல் தாம்பரம் வரையிலான பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன. மெட்ரோ ரயில் பணிகளுக்கான இந்த சாலையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலை மிகவும் குறுக்கப்பட்டுவிட்டது. தற்போது, ஆலந்தூர் விமான நிலையம் இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இரும்பு தடுப்புகளை அகற்றும் பணி மெத்தனமாக நடக்கிறது. இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடருகிறது. எனவே, இங்குள்ள இரும்பு தடுப்புகளை அகற்றி, சாலைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அதிகாரி விளக்கம்

நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் பணிகள் தற்போதுதான் முடிவடைந்துள்ளன. விரைவில் அங்குள்ள இரும்பு தடுப்புகளை அகற்றி, சாலையை பராமரிக்கும் பணியை தொடங்கவுள்ளோம்’’ இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x