Published : 12 Nov 2021 08:47 PM
Last Updated : 12 Nov 2021 08:47 PM

தமிழகத்தில் நாளை 5,000 இடங்களில் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை

தமிழகத்தில் நாளை 5,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிடன் கூறும்போது, ”தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, நாளை 13-11-2021 தமிழகத்தில் முதல் முறையாக 5000 இடங்களில் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (14-11-2021) 8-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கூடுதலாக 50 மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பள்ளமான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுகிற பணியில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதற்குத் தீர்வும் இப்போது மிகப்பெரிய அளவில் கண்டுள்ளது.

தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி மழைக்காலத்தைத் தொடர்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகிற காய்ச்சல், சளி, சேற்றுப் புண், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளிலிருந்து மக்களைக் பாதுகாத்திட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆங்காங்கு இருக்கிற உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

தமிழகத்தில் இன்று 75 தனியார் மருத்துவமனைகளின் சார்பில் சென்னையில் 164 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி முடித்திருக்கிறார்கள். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 115 இடங்களில் மருத்துவ முகாம்களும், 3 ஆயிரத்து 122 நடமாடும் வாகனங்களின் மூலமும் மருத்துவ சிகிச்சை அளித்ததில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 143 பேர் மருத்துவப் பயன் அடைந்திருக்கிறார்கள்.

நாளை சனிக்கிழமை (13-11-2021) தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் சென்னையில் 750 இடங்களில் நடைபெற உள்ளன.

நாளை காலை 10 மணியளவில் சென்னை ரிப்பன் மாளிகையில் நான் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றுத் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 250 இடங்களில் மெகா மருத்துவ முகாம்களைத் தொடங்கி வைக்க இருக்கிறோம்.

அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (14-11-2021) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 72% பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 33% பேரும் செலுத்தியுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடனான கூட்டத்தில் 18 வயதைத் தாண்டிய அனைவருக்குமே தடுப்பூசி என்கிற இலக்கை அடைந்திட வேண்டும் என்கிற வகையில் கூட்டத்தினை நடத்தினார்கள். அக்கூட்டத்தில் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 78 சதவிகிதத்தினரும், 2-வது தவணை தடுப்பூசியை 33 சதவிகிதத்தினரும் செலுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 69 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசியை 70 லட்சம் பேர் செலுத்தக் காத்திருக்கிறார்கள். இவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இவர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றொரு மகிழ்ச்சியான செய்தி. கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி 1966ஆம் ஆண்டு 50 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1968ஆம் ஆண்டு 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்த்து 100 மாணவர்களைக் கொண்டும், 2004ஆம் ஆண்டு 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்த்து 150 மாணவர்கள் என்று மருத்துவக் கல்லூரி நடத்தப்பட்டு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x