Last Updated : 22 Oct, 2021 01:28 PM

 

Published : 22 Oct 2021 01:28 PM
Last Updated : 22 Oct 2021 01:28 PM

இலங்கை கடற்படையைக் கண்டித்து 3-வது நாளாக மீனவர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 3-வது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவரைக் கொன்ற இலங்கை கடற்படையினரைக் கண்டித்து 3-வது நாளாக மீனவர்கள் இன்று (அக்.22) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் அக்.18-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், எஸ்.சவுந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியர் (32) ஆகிய 3 பேரும் சுமார் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் மறுநாள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயலைக் கண்டித்தும், இறந்த மீனவர் ராஜ்கிரணின் சடலம் மற்றும் சிறை பிடிக்கப்பட்டுள்ள 2 மீனவர்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் 3-வது நாளாக மீனவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா (25), தாய் ஆரவள்ளி உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், போராட்டக் களத்தில் பிருந்தாவின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதற்கிடையில், நேற்று இரவு அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இன்று அதிகாலை அலுவலர்கள், மீனவர்கள் சென்று இந்தியா- இலங்கை சர்வதேச எல்லையில் ராஜ்கிரணின் சடலத்தைப் பெற்று வந்துவிடலாம் என்று உறுதி அளித்தார்.

இதை நம்பி, இன்று 2 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு ஆயத்தமான நிலையில், இலங்கை அரசிடம் இருந்து எவ்விதத் தகவலும் வரவில்லை என அலுவலர்கள் கூறியதால் அதற்கான முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இது, மீனவர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x