Last Updated : 12 Mar, 2016 09:39 AM

 

Published : 12 Mar 2016 09:39 AM
Last Updated : 12 Mar 2016 09:39 AM

விஜயகாந்தின் திடீர் முடிவால் கருணாநிதி கடும் அதிருப்தி

குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிடிவாதத்தால் தனித்து போட்டியிடும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவை வீழ்த்த வேண்டு மானால் தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என திமுக திட்டமிட்டது. விஜயகாந்துக்கு கருணாநிதி பகிரங்க அழைப்பும் விடுத்தார். விஜயகாந்த் குடும்பத்தினருடன் ஸ்டாலின் குடும்பத்தினரும், திமுகவுக்கு நெருக்கமான தொழிலதிபர்களும் ரகசியமாக பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது.

கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ‘‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது” என்றதன் மூலம் தேமுதிகவிடம் இருந்து கூட்டணிக்கு சாதகமான பதில் வந்ததால்தான் கருணாநிதி இப்படி பேசியிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், யாரும் எதிர் பார்க்காத வகையில் தனித்துப் போட்டி யிடுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.

இது திமுகவுக்கு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கருணாநிதி கடும் அதிருப்தியடைந் ததாகவும் தேமுதிகவுடன் பேச்சு நடத்தியவர்களை கடிந்து கொண்டதாகவும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''இந்தத் தேர்தலில் எப்படியாவது விஜயகாந்த் வந்து விடுவார் என கருணாநிதி உறுதியாக நம்பினார். அந்த அளவுக்கு ஸ்டாலின் அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். நேர்காணலுக்கு வந்த மாவட்டச் செயலாளர்களும், தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பேசி விட்டோம். தேமுதிக நிச்சயம் வந்துவிடும் என கருணாநிதியிடம் உறுதியாக தெரிவித் துள்ளனர். ஆனால், தனித்துப் போட்டி என விஜயகாந்த் அறிவித்ததால் கருணாநிதி அதிருப்தியடைந்துள் ளார்'' என்றார்.

''கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தன்னை பெரிய தலைவராக விஜயகாந்த் கருதுகிறார். இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டது போலாகிவிடும். ஒருவேளை திமுக வென்று ஸ்டாலின் முதல்வரானால் தனக்கான வாய்ப் புகள் குறைந்து விடும் அல்லது இல்லாமல் போய்விடும் என விஜய காந்த் நினைக்கிறார். ஸ்டாலினை முன்னிறுத்தியே திமுகவினர் கூட்டணி பேசியது அவரை யோசிக்க வைத்து விட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் தனித்து போட்டி என துணிந்து அறிவித்துவிட்டார்'' என்றும் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x