Published : 01 Mar 2016 05:05 PM
Last Updated : 01 Mar 2016 05:05 PM

நேர்காணலை புறக்கணித்த மாவட்ட காங். தலைவர்களை நீக்க இளங்கோவன் முயற்சி

மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட நேர்காணலை புறக்கணித்த மாவட்டத் தலைவர்களை நீக்க தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அவர்களிடம் மாவட்ட வாரியாக கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட்டன. காங்கிரஸில் இளங்கோவனுக்கு எதிராக கொடிபிடித்து நிற்கும் ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்டவர்களின் முக்கிய ஆதரவாளர்கள் விருப்ப மனு கொடுக்காததுடன் இவர்களது ஆதரவு பெற்ற மாவட்டத் தலைவர்கள் ஒன்பது பேர் நேர்காணலுக்கு ஒத்துழைக்காமல் புறக்கணித்தனர்.

இந்த நிலையில், விருப்ப மனு கொடுத்து, நேர்காணலில் கலந்து கொண்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தேர்தலில் போட்டியிட முடியாது என அதிரடியாக அறிவித்திருக்கும் இளங்கோவன், நேர்காணலை புறக்கணித்த மாவட்டத் தலைவர்கள் ஒன்பது பேரை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக மாவட்டப் பொறுப்பாளர்களை நியமிக்க திட்ட மிடுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய இளங்கோவன் தரப்பினர், ''இளங் கோவனின் நடவடிக்கைகளை ராகுல்காந்தி ஆதரிக்கிறார். அதனால்தான், செயல்படாத தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் ஆறு பேரை நீக்கி விட்டு அவர்களுக்குப் பதிலாக மாவட்டப் பொறுப் பாளர்களை இளங்கோவனால் நியமிக்க முடிந்தது. அதுபோல, நேர்காணலை புறக்கணித்த சிதம்பரம், தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 9 பேரையும் இளங்கோவன் நிச்சயம் மாற்றிக் காட்டுவார்'' என்கிறார்கள்.

சிதம்பரம் விசுவாசிகளோ, ''வேளைக்கு ஒரு பேச்சு பேசும் இளங்கோவனை தலைவராக வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்வது முடியாத காரியம் என்று சிதம்பரம் தனது தரப்பு நியாயத்தை தலைமையிடம் ஆணித்தரமாக எடுத்து வைத்து விட்டார். இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தேர்தலை நடத்துவதற்காக 14 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை தனது தலைமையில் அமைக்க வேண்டும் என்பதே சிதம்பரத்தின் கோரிக்கை.

இதற்கு இன்னமும் செவிசாய்க்காத தலைமை இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தவே பார்க்கிறது. எனவே, இனியும் பொறுமையாக இருப்பது சரியாக இருக்காது என்பதால், தங்கபாலு, கிருஷ்ணசாமி, வசந்தகுமார் உள்ளிட்ட தலைவர்கள் மீண்டும் டெல்லி சென்று, 'இளங்கோவன் தலைவராக இருந்தால் எங்களால் தேர்தல் பணி செய்யமுடியாது. எனவே, தேர்தல் முடியும் வரை கட்சி நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கி இருக்க முடிவெடுத் திருக்கிறோம்' என்று சொல்லிவிட்டு வர தீர்மானித் திருக்கிறார்கள்'' என்றார்கள்.

இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் சிதம்பரம் வாக்காளராக உள்ள காரைக்குடி தொகுதிக்கு 12 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தும் யாரும் நேர்காணலில் கலந்துகொள்ளக் கூடாது என தடுத்து நிறுத்திவிட்டது சிதம்பரம் அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x