Published : 28 Mar 2016 11:26 AM
Last Updated : 28 Mar 2016 11:26 AM

திமுக மீது கோபப்பட தயாராக இல்லை: வைகோ

திமுக மீது கோபப்பட தான் தயாராக இல்லை என மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் களத்திலே நாங்கள் திமுகவை ஒரு போட்டியாக கருதவில்லை. ஆத்திரத்தில், எரிச்சலில் அவர்கள் என் மீது கோபத்தை காட்டுகிறார்கள். அதற்காக நான் அவர்கள் மீது கோபப்பட தயாராக இல்லை.

ஆனால், நான் கேட்ட 2ஜி கேள்வி விஸ்வரூபம் எடுக்கும். நான் நிறைய ஆதாரங்கள் வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக வெளியிடுவேன்" எனக் கூறினார்.

முன்னதாக வைகோ, "2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி பலிகடா ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடித்தவர்கள் திரைமறைவில் பதுங்கிக் கொண்டனர். சென்னையில் சாகித் பால்வா- மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது என்ன பரிமாற்றம் நடந்தது. கோடிக்கணக்கான ரூபாய் பணத்துக்கு ஒரு டி.டி. கொடுக்கப் பட்டது என்கிறார்களே. அது யாரிடம் கொடுக்கப்பட்டது. ஸ்டாலினுக்கும், சாகித் பால்வாவுக்கும் உள்ள உறவை சிபிஐயிடம் சொன்னதால்தானே பெரம்பலூர் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கினார்.

சாதிக்பாட்சா மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை சிபிஐ முறையாக விசாரிக்க வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன். சாதிக்பாட்சாவின் மரணத்துக்கு திமுகவே காரணம் என நான் குற்றம்சாட்டுகிறேன்" எனக் கூறியிருந்தார்.

2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்பு இருப்பதாக கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கறிஞர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x