Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

எய்ம்ஸ் மாணவர்களை தனியார் கல்லூரிகளில் சேர்க்க முடியாது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களை தனியார் கல்லூரியில் சேர்க்க முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், தே.கல்லுப் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி, நெல்லை, தென் காசி, விருதுநகர், மதுரை எனப் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று முகாம்களை ஆய்வு செய்தேன். 40 ஆயிரம் மையங்களில் 26 லட்சத்து 11 ஆயிரம் என்ற இலக்கை அடைந்துள்ளோம். இருப்பினும் நேற்று இரவு வரை தமிழகத்தில் 3,74,989 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களையும் சேர்ந்தால் இது வரை 4 கோடியே ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்தமுள்ள 6 கோடியே 6 லட்சம் பேரில் 4 கோடியே 1 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 66 சதவீதம் பேர் முதல் டோஸ் என்ற வகையில் பயன் பெற்றது பெரிய சாதனை.

இந்தியாவில் உள்ள 754 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற வகையில் உதகை முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 5 லட்சத்து 14 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 29 லட்சம் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பினோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற் பட்டுள்ளதால் கூட்டம் அதி கரித்துள்ளது. பிற்பகலுக்குள் தடுப்பூசி சில இடங்களில் காலி யானது தெரிந்தது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் சொன்னதாக நிரூபிக்க முடியுமா?.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டப் பேரவை முதல் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என வாக்குறுதி அளித்தோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரி அல்லது புதுச்சேரி ஜிப்மரில் 150 மாணவர்களை சேர்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை.

தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் வேண்டுமானால் சேர்க்கலாம் என வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு முடிவை அறிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் பி.மூர்த்தி உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x