Last Updated : 02 Sep, 2021 01:31 PM

 

Published : 02 Sep 2021 01:31 PM
Last Updated : 02 Sep 2021 01:31 PM

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ், சுயேச்சை எம்எல்ஏக்கள் 11 பேர் கூட்டாக வெளிநடப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றாததால் புதுச்சேரி சட்டப் பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் என 11 பேர் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பல மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி நிலை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும்" என்று கோரினார். அப்போது சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி இல்லை.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று பேச, பதிலுக்கு திமுக எம்எல்ஏக்கள் பேசியதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது.

அமைச்சர் சாய் சரவண குமார், "விவசாயிகளின் நன்மைக்கான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதுச்சேரியில் இதனால் என்ன பாதிப்பு?" என்று கேட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆளும் கட்சி தரப்பில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் மற்றும் பாஜக உறுப்பினர்கள் எழுந்து பேசினர். அனைவரின் மைக்கையும் அணைக்க சபாநாயகர் ராஜவேலு உத்தரவிட்டார்.

அனைவரும் அமர்ந்த பின்பு, அமைச்சர் நமச்சிவாயம், "வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை. இடைத்தரகர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "இதற்கு முதல்வர் வந்தவுடன் பதில் தரட்டும். அவரின் பதில்தான் எங்களுக்குத் தேவை" என்றார்.

பின்னர் முதல்வர் ரங்கசாமி அவைக்கு வந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா இப்பிரச்சினையை எழுப்பினார். முதல்வர் ரங்கசாமி பதில் ஏதும் தரவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சிவா கூறுகையில், "விவசாயிகளுக்கு எதிர்ப்பான நிலையை உருவாக்காதீர்கள். மனசாட்சி இதற்கு ஒப்புக்கொள்கிறதா" என்று குறிப்பிட்டும், முதல்வர் பதில் தராததால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆறு பேர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர், சுயேச்சை எம்எல்ஏக்கள் பி.ஆர்.சிவா, நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் என 11 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x