Published : 02 Sep 2021 12:56 PM
Last Updated : 02 Sep 2021 12:56 PM

கோடநாடு வழக்கு; எஸ்டேட் மேலாளர் ஆஜராகவில்லை: விசாரணை அக்.1-க்கு ஒத்திவைப்பு

விசாரணைக்கு ஆஜரான சயான் மற்றும் மனோஜ்.

உதகை

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராகவில்லை. இந்நிலையில், விசாரணை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக, சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். வழக்கு கடந்த மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் மாதம் 2-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர்.

அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கிறஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். சாட்சிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், டி.கே.தேவராஜ் ஆஜராகினர். விசாரணை ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

இன்றைய விசாரணைக்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடராஜன் ஆஜராகவில்லை. அவருக்கு போலீஸார் சம்மன் வழங்கவில்லை எனத் தெரிகிறது.

விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தினர். அதன் பேரில், நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாணையை அக்டோபர் மாதம் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, "போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல் விசாரணைக்கு நீண்டகால அவகாசம் தேவை என்பதால், கால அவகாசம் கோரப்பட்டது. இதன் பேரில், நீதிபதி விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x