Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM
கணவர் விஜயகாந்தின் சிகிச்சைக்காக துபாய் செல்ல பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடனிருந்து உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளார். பிரேமலதா மீது நெல்லை போலீஸார் கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட குற்ற வழக்கு மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாஸ்போர்ட் அதிகாரி அவரது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றுள்ளார்.இதை எதிர்த்து பிரேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது பிரேமலதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி, நெல்லை போலீஸாரால் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து எந்த சம்மனும் வரவில்லை. இந்த வழக்கு தொடர்பாக எந்தத் தகவலையும், மறைக்கவில்லை. மனுதாரர் தனது கணவர் விஜயகாந்தின் சிகிச்சையின்போது உடனிருந்து உதவ வேண்டியிருப்பதால் அவருடைய பாஸ்போர்ட்டை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராகவுள்ளோம் என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி ஆர்.மகாதேவன், மனுதாரரான பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக அவருக்கு வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்ற வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் எனவும், வெளிநாடு சென்று திரும்பும் தேதியை தெரிவிப்போம் எனவும் பாஸ்போர்ட் அதிகாரியிடம் உறுதிமொழி அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT