Published : 30 Aug 2021 01:55 PM
Last Updated : 30 Aug 2021 01:55 PM

பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் விடுதிக் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆதிதிராவிட மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.8.2021) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோயம்புத்தூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ஆகிய 8 கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் நகரில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி, மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் தலா 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர் மற்றும் பள்ளி மாணவியர் விடுதிகள், மயிலாடுதுறையில் தலா 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, விருதுநகர் மாவட்டம், சோழபுரத்தில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதி, நபார்டு நிதியுதவியுடன் திருநெல்வேலியில் 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர் விடுதி, கிருஷ்ணகிரியில் 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதி என மொத்தம் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதி, என 8 கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சோ.மதுமதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x