Last Updated : 27 Aug, 2021 02:20 PM

 

Published : 27 Aug 2021 02:20 PM
Last Updated : 27 Aug 2021 02:20 PM

புதுச்சேரியில் 41 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி

"புதுச்சேரி முழுவதும் ஏறக்குறைய 70 சதவீகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக 41 கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு,"'ஆசாதிகா அம்ரித் உத்சவின்" ஒரு பகுதியாக களவிளம்பரம் மற்றும் செய்திப் பிரிவின் சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு காணொலி வாகனங்களை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

துணைநிலை ஆளுநர் மாளிகை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் (தெற்கு) தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர், புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறைச் செயலர் உதய குமார், சுகாதாரத்துறைச் செயலர் அருண், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, சென்னை மண்டல கள விளம்பரப் பிரிவின் இயக்குனர் காமராஜ், சென்னை மண்டல செய்தி மற்றும் கள விளம்பர பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, சுகாதாரத் துறையின் இயக்குனர் ஸ்ரீராமலு, புதுச்சேரி, கள விளம்பரப் பிரிவின் துணை இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்து ஆளுநர் தமிழிசை பேசுகையில், "தடுப்பூசி என்பது இந்த கால கட்டத்தில் முக்கியமான ஒன்றாகும். அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க புதுவை அரசு விழாக்கள். தெருமுனை முகாம்கள், மாலை நேர தடுப்பூசி முகாம்கள் போன்ற அனைத்து முன்னுதாரணமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதன் பலனாக 41 கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுவதும் ஏறக்குறைய 70 சதவீகிதம் தடுப்பூசி போடபட்டுள்ளது.

மேலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாற்ற, மக்களிடையே உள்ள தயக்கத்தை போக்க இந்த பிரசார வாகனங்கள் உதவும் என்றும் தடுப்பூசி சென்றடையாதவர்களுக்கும் சென்றடைய இந்த வாகனம் உறுதுணையாக விளங்கும்." என்று குறிப்பிட்டார். பின்னர், பாரத பிரதமர் மோடி கூறிய வாசகம் பதித்த விழிப்புணர்வு சீட்டுகளையும் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து செ்யதியாளர்களிடம் அவர் கூறுகையில், "பட்ஜெட்டில் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், கரோனாவை எதிர்கொள்ளவும் சுகாதாரத்துறைக்கு பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். மிக குறுகிய காலத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தந்ததற்கு மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி. மூன்றாம் அலையை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்கும் மூன்றாம் அலை வராமல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பட்ஜெட் கூடுதல் நிதியுடன் அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் கிடைத்துள்ளது. அனைத்து திட்டங்களும் செம்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டு புதுச்சேரி வளர்ச்சியடைந்ததாக மாறும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x