Published : 25 Aug 2021 04:46 PM
Last Updated : 25 Aug 2021 04:46 PM

மதுரையில் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா மீண்டும் அமையுமா?- கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு

மதுரை

காந்தி மியூசியத்தை புதுப்பொலிவுபடுத்த தமிழக அரசு ஒதுக்கிய ரூ.6 கோடியில், அதன் வளாகத்தில் குடியரசு முன்னாள் தலைவர் ஆர்.வெங்கட்ராமனால் திறந்து பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா மீண்டும் அமையுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், தமிழகத்தில் சென்னை, வேலூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் அறிவியல் பூங்காக்கள் உள்ளன. இதில், சென்னை, திருச்சியில் கோளரங்கமும், மற்ற இடங்களில் அறிவியல் பூங்காவும், அறிவியல் கண்காட்சியும் அமைந்துள்ளன. மதுரையில் கடந்த காலத்தில் 4 இடங்களில் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா இருந்தது.

காந்தி மியூசியத்தில் இருந்த குழந்தைகளுக்கான அறிவியல் பூங்காவைத் தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதியில் குடியரசு முன்னாள் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1995ஆம் ஆண்டு திறந்து வைத்தார். தற்போது அந்த இடத்தில் அவர் திறந்து வைத்த கல்வெட்டு தவிர அறிவியல் பூங்கா இருந்த எந்தச் சுவடும் இல்லை. ராஜாஜி பூங்காவில், தற்போது முருகன் கோயில் மண்டபம் கட்டியிருக்கும் பகுதியில் அறிவியல் பூங்கா இருந்தது. இந்தப் பூங்காவை முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி திறந்து வைத்தார்.

ஆனால், திறந்த வேகத்திலேயே இந்தப் பூங்கா முடங்கியது. தற்பாது அந்தப் பூங்கா இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் மண்டபம் கட்டியுள்ளது. அதுபோல், மாநகராட்சி அருகே எதிரே சமுதாயக் கல்லூரி அருகே ஒரு அறிவியல் பூங்கா இருந்தது. அது இருந்ததற்கான அறிகுறியே தற்போது அங்கு இல்லை. காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்த பூங்காவும் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. திருப்பரங்குன்றம் சுற்றுச்சூழல் பூங்காவிலும் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா இருந்தது.

தற்போது அது சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுவிட்டது. ஊரைச் சுற்றி இப்படி அறிவியல் பூங்காக்களாக இருந்த மதுரை, தற்போது வருவாய் தரும் வணிக வளாகங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. மதுரையில் இருந்த அறிவியல் பூங்காக்கள் மூடப்பட்டால் இங்கு பணிபுரிந்த பணியாளர்கள், சென்னை, திருச்சி அறிவியல் பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் தற்போது மதுரையில் சுற்றுலாவை மேம்படுத்த காந்தி மியூசியத்திற்கு ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல், ரூ.70 கோடியில் விரைவில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைகிறது.

ரூ.20 கோடியில் மீனாட்சியம்மன் கோயில் புனரமைப்புப் பணிகள், ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், வைகை ஆற்றில் இருந்து தெப்பக் குளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் நிரப்பும் திட்டம் உள்ளிட்ட சுற்றுலா திட்டங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுகின்றன. ‘எய்ம்ஸ்’, மதுரை விமான நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட மருத்துவம், கல்வி, விமானப் போக்குவரத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் அறிவியல் பூங்காக்கள் மட்டும் அமைக்க உள்ளூர் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆர்வம் காட்டவில்லை.

கடந்த ஆண்டு புதிய பேருந்து நிலையம் அருகே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மற்றொரு அறிவியல் பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், மதுரையின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.1,000 கோடியை மீனாட்சியம்மன் கோயில், வைகை ஆற்றுப்பகுதியிலே செலவிடப்பட்டுவிட்டது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், 10 ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரை இடம் வழங்கும் பட்சத்தில் மதுரையில் மத்திய, மாநில அரசு சார்பில் ரூ.4 கோடியும், மத்திய அரசு சார்பில் ரூ.4 கோடியும் தரத் தயாராக இருந்தும் அதிகாரிகள் இடம் வழங்கவில்லை. ஆனால், இதே இடத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் இடம் ஒதுக்கிவிட்டார்கள். மதுரை அமைச்சர்கள், காந்தி மியூசியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.6 கோடி நிதியில் அதன் வளாகத்திலே மதுரையில் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா அமைக்க முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x