Published : 06 Mar 2014 06:55 PM
Last Updated : 06 Mar 2014 06:55 PM
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
'தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள 16-வது நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தேமுதிக துவங்கியதுள்ளது' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மகிழ்ச்சி
இதைத் தொடர்ந்து, தேமுதிகவின் அதிகாரப்பூர்வ அறிவுப்புக்கு மகிழ்ச்சி வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாத காலமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம் என்ற அவர், இப்போது தேமுதிகவுடனான கூட்டணி உருவாவதற்கான காலம் கனிந்துள்ளதாக தெரிவித்தார்.
பாஜக அணியில் பாமக
இதனிடையே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள >பாமக, கூட்டணிப் பேச்சு நடத்த குழு ஒன்றை இன்று அமைத்தது.
முன்னதாக, திமுகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தேமுதிக ஆதரவு தொலைக்காட்சி செய்தி சேனலான கேப்டன் டிவியைச் சேர்ந்த நிருபர்கள் புதன்கிழமை இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தி சேகரிக்க வந்ததால், இந்தக் கூட்டணிப் பேச்சு உறுதிதான் என பத்திரிகையாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.
இதன் தொடர்ச்சியாகவே, திமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக இன்றைய நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.
இதனிடையே, பாஜக மேலிடத்தில் இருந்து தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முயற்சிகளைக் கைவிடுமாறு அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவியது.
இந்தச் சூழலில், பாஜகவுடன் கூட்டணி பேச்சு துவங்கப்பட்டுள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT