Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் இன்று தாக்கல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, தொழில், வணிகத் துறையினர் உட்பட பல தரப்பினரின் கருத்துகளை கேட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 11-ம் தேதி ஆலோசனை நடத்தி, பட்ஜெட்டை இறுதி செய்தார்.

முதல்முறையாக காகிதம் இல்லாத மின்னணு வடிவில்பட்ஜெட் (இ-பட்ஜெட்) வெளியிடப்படுவதால், சட்டப்பேரவை கூட்டரங்கில் உறுப்பினர்கள் அனைவருக்கும் மேஜை கணினி, கையடக்க கணினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மனோ தங்கராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x