Published : 22 Feb 2016 09:10 PM
Last Updated : 22 Feb 2016 09:10 PM

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் பாஜகவுக்கு தயக்கம் இல்லை: முரளிதர ராவ்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் தயக்கம் இல்லை என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான பி.முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வசதியாக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பாளராக கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியல் புதிய இணையதளத்தை முரளிதர ராவ் தொடங்கி வைத்தார். மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் முரளிதர ராவ் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. வாக்குச்சாவடி அளவில் குழு அமைக்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளது. சட்டப்பேரவை தொகுதி வாரியாக செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம்.

இந்தத் தேர்தலில் வலிமையான கூட்டணியில் பாஜக இடம்பெறும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில், ‘கிங்’காக இருக்க விரும்புவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் விரும்புவதில் தவறு எதுவும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என பாஜக நினைக்கவில்லை. விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x