Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM

சென்னை வடக்கு சரகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆய்வு: விதிகளை மீறியவர்களிடம் ரூ.41.79 லட்சம் அபராதம்

சென்னை வடக்கு சரக செயலாக்க ஆர்டிஓ மூலம், கடந்த ஜூலை மாதத்தில் 2,500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், விதிகளை மீறிய 238 வாகனங்களுக்கு ரூ.41.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிசந்திரன் உத்தரவைத் தொடர்ந்து, ஆர்டிஓ மா.செழியன், வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் மணலி, பூந்தமல்லி, திருவள்ளூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், விதிகளை மீறிய 238 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆர்டிஓ மா.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. விபத்துகளை குறைக்க, சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, சென்னை வடக்கு சரக செயலாக்க பிரிவு ஆர்டிஓ சார்பில் தினமும் எங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த மாதத்தில் 2,500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நடத்திய ஆய்வில், விதிமுறைகளை மீறிய 238 வாகனங்களுக்கு மொத்தம் 41.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ரூ.27.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27.43 லட்சம் அபராதத்தை சம்பந்தப்பட்ட ஆர்டிஓக்கள் மூலம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வேக அளவை விட அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுதல், போக்குவரத்து சிவப்பு விளக்கை மதிக்காமல் தாண்டிச் செல்லுதல் போன்ற விதிமீறல்கள் அதிகமாக இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x