Last Updated : 11 Feb, 2016 02:38 PM

 

Published : 11 Feb 2016 02:38 PM
Last Updated : 11 Feb 2016 02:38 PM

சேலம் சிறையில் ‘ஜாலியன் வாலாபாக்’ கொடூரம்: இன்று 66-வது நினைவு நாள்

ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் சுதந்திர இந்தியாவில் சேலம் சிறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் 22 பேர் கொல்லப்பட்ட 66-வது ஆண்டு நினைவு நாள் இன்று (11-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கொடூரம் போல் சுதந்திர இந்தியாவில் சேலத்தில் கொடூரம் நடந்தது.

கடந்த 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் ஆங்காங்கே கிளர்ச்சி வெடித்தது. சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழகம், கர்நாடகம், ஆந்திர, கேரளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஜாலியன் வாலாபாக் போல் சம்பவம் நடந்தது. இதுகுறித்து சேலம் பாரமகால் நாணய சங்க இயக்குநர் சுல்தான் கூறியதாவது:

கடந்த 1950-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் மதில் சுவர்களால் சூழப்பட்ட திறந்தவெளியில் நிறுத்தப்பட்டனர். சிறைத்துறை அமைச்சர் மாதவமேனன், தலைமை வார்டன் தாமோதரன், ஜெயிலர்கள் கிருஷ்ணநாயர், அய்யா பிள்ளை ஆகியோரது நடவடிக்கையால் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 19 பேர் சுருண்டு விழுந்தும், 3 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவர்களில் திருச்செங்கோடு காவேரி, சேலம் அரியாகவுண்டம்பட்டி ஆறுமுக பண்டாரம், கடலூர் சேக்தாவூத் ஆகிய மூவரும் தமிழகத்தையும் மற்றவர்கள் கேரளத்தையும் சேர்ந்தவர்கள் 121 பேர் காயமடைந்தனர்.

இதில் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து உயிர் தப்பிய நாராயண நம்பியார் (87), கேரள மாநிலம் கண்ணூரில் வசிக்கிறார். இவருக்கு கேரள அரசு பட்டயம் வழங்கி கவுரவம் செய்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேலம் மாவட்ட குழு செயலாளர் தங்கவேலு கூறியதாவது: சேலம் சிறையில் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் தங்களுக்கு அரசியல் கைதிகளுக்கு உரிய கவுரவத்தை தர வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். 1950-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி போராட்டம் வெடித்தது. தொடர்ச்சியாக பிப்ரவரி 11-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடந்தது.

உயிரிழந்தவர்கள் நினைவாக சேலம் சிறை வளாகத்தில் நினைவுத்தூண், அஸ்தம்பட்டி சாலை முகப்பில் நினைவு வளைவு அமைக்க வேண்டும். உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x