Published : 09 Feb 2016 07:54 PM
Last Updated : 09 Feb 2016 07:54 PM

மாற்றுத் திறனாளிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மக்கள் நலக் கூட்டணி அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நலக் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு சட்ட ரீதியாக வழங்க வேண்டிய உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராடும் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காணாமல் தமிழக அரசு அடக்குமுறையை ஏவிவிட்டதோடு 500-க்கும் அதிகமானேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை மக்கள் நலக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் காவல் துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்துக்கு மக்கள் நலக் கூட்டணி தனது ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது'' என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கூறியுள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x